ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். மேலும் 4 படகையும், 27 மீனவர்களையும் கைது செய்தனர்.
நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கு மேலான படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்து விட்டு இன்று (டிச.,15) கரை திரும்ப வேண்டும். ஆனால் நேற்று மதியம் நடுக்கடலில் மீன்பிடித்த போது, அங்கு 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து, படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
ஆனால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள், மீனவர்கள் மீது கல், காலி மதுபாட்டில்களை வீசினர். இதில் மீனவர்கள் காயமின்றி தப்பினர்.பின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் சேர்ந்த ஆரோக்கியகுரூஸ், சுரேஷ், அந்தோணிராஜ், சிம்சன் ஆகியோரது 4 படகையும் இலங்கை வீரர்கள் பிடித்தனர். அதில் இருந்த சுரேஷ் 47, அசோக் 18, குமரேசன் 42, கோபி 42, அப்துல்கலாம் 20 உள்பட 27 மீனவர்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து நடுக்கடலில் இலங்கை வீரர்கள் கப்பல் மற்றும் படகில் ரோந்து சுற்றி வந்ததால் அச்சமடைந்த மீனவர்கள் 200க்கு மேலான படகுடன் மீன்வரத்து இன்றி நேற்று இரவு ராமேஸ்வரம் கரை திரும்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE