புதுடில்லி : ''இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, லாடக்கில், சீனப் படைகள் பின்வாங்கின,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில், பொது எல்லைக் கோடு அருகே, ஆக்கிரமிப்பு முயற்சியில் இறங்கிய சீன ராணுவத்தை தடுக்க, இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எழு மாதங்களுக்கு மேலாக, அங்கு பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில், ராஜ்நாத் சிங், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது:நம் நாடு, இறையாண்மையை காக்க, தேவைப்பட்டால் யாருடனும் போரிட்டு, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும். இமயமலை பகுதியில், ஆக்கிரமிப்பு முயற்சி நடந்துள்ளது; ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன.
இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்திலும் இதே போக்கு காணப்படுகிறது. லடாக்கில், பொது எல்லைக்கோடு அருகே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையான தருணத்தில், நம் ராணுவ வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். சீனப் படைகளுடன் மிகுந்த தீரத்துடன் போரிட்டு, அவர்களை பின்வாங்கச் செய்துள்ளனர். இந்தாண்டு, நம் ராணுவத்தினர் நிகழ்த்திய வீரச் செயல்களை கேட்டு, வரும் தலைமுறையினர் பெருமை கொள்வர். எப்போது எல்லைப் பிரச்னை ஏற்பட்டாலும், இந்தியா - சீனாவின் ராணுவ பலம் ஒப்பீடு செய்யப்படுகிறது. யாருக்கு ராணுவ பலம் அதிகம் உள்ளது என, விவாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை, சீனாவின், 80 சதவீத மக்கள், 1949ல் நடந்த புரட்சி வரை பின்பற்றியிருந்தனர்.இந்த வகையில், இந்தியா, ஒருவரை கூட போருக்கு அனுப்பாமல், 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. இது போன்ற வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. தொழில் நிறுவனங்கள், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் ஆர்வமுடன் ஈடுபடு வேண்டும். உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஊக்குவிக்க, மத்திய அரசு, ஏராளமான சலுகைகள் வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பையும், அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் துறை, அனைத்துக்கும் தாய் போன்றது. எந்தக் காலத்திலும், அத்துறையின் வளர்ச்சியை பின்னோக்கித் தள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது. மத்திய அரசு, விவசாயிகளுடன் வெளிப்படையாக பேச்சு நடத்த தயாராக உள்ளது. இதற்கு விவசாயிகள் முன் வர வேண்டும்.ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE