ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, 24 மினி கிளினிக்குகள் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன், அனைத்து பகுதியிலும் மருத்துவ சேவை கிடைக்க வழி செய்ய, 2,000 மினி கிளினிக் துவங்க முதல்வர் அறிவித்தார். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில், 24 கிளினிக்குகள் முதற்கட்டமாக தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதி, சுகாதார சேவை தேவைப்படும் இடங்களாக, 80 இடம் கண்டறிந்து பரிந்துரைக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக, 24 இடங்களில் மினி கிளினிக் துவங்க அனுமதி கிடைத்துள்ளது. இங்கு ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் பணி செய்வார்கள். காய்ச்சல், சளி, இருமல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை இலவசமாக பார்க்கப்படும். கிளினிக் தினமும் காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி, மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை செயல்படும். கிராமப்பகுதியில், 7:00 மணி வரை மட்டும் செயல்படும். அனைத்து கிளினிக்குகளும், நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE