சேலம்: ''தமிழகத்தில், டிச.,27ல் துவங்கும் லாரி ஸ்டிரைக்குக்கு ஆதரவு அளிப்பது குறித்து, டிச.,24ல் சென்னையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும்,'' என, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாஜலம் தெரிவித்தார்.
தமிழகத்தில் இயக்கப்படும், 4.50 லட்சம் லாரிகளின் உரிமையாளர்கள், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் - தமிழ்நாடு, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகிய இரண்டு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக டிச.,27ல் ஸ்டிரைக் நடத்தப்போவதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் - தமிழ்நாடு அறிவித்துள்ளது. இந்த ஸ்டிரைக்குக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் (சிம்டா) ஆகியன ஆதரவு அளித்துள்ளன. ஆனால், இந்த ஸ்டிரைக் குறித்து, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் முருகன் வெங்கடாஜலம் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளால் மோட்டார் தொழில் கடுமையாக நசுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கடும் அதிருப்தியில் தான் உள்ளனர். ஆனால், ஸ்டிரைக் அறிவிப்புக்கு முன்னர், எங்களுடன் கலந்தாலோசனை செய்யாமல், அவர்கள் தன்னிச்சையாக ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இந்த போதிலும் தற்போதுள்ள தொழிலில் சூழலை கருத்தில் கொண்டு, ஸ்டிரைக்குக்கு ஆதரவு அளிப்பது குறித்து, சென்னையில், டிச.,24ல் பொதுக்குழு கூட்டி, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த கூட்டத்தில், லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, டாக்சி, கார், வேன் என மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். அதில், எங்கள் சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE