ஓமலூர்: ஹிந்து முன்னணி நிர்வாகி மீது, நடத்திய கொலை வெறி தாக்குதலில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 32; கூலித்தொழிலாளி. ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று முன் தினம் இரவு, 7:00 மணியளவில் பாப்பிசெட்டிப்பட்டி காலனியில், பெங்களூரை சேர்ந்த சிலர், கிறிஸ்தவ மதமாற்றம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வெங்கடாசலம் கேட்ட போது, அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பியது. தலையில் பலத்த காயத்துடன், ஓமலூர் அரசு மருத்துவமனையில் வெங்கடாசலம் அனுமதிக்கப்பட்டார். ஓமலூர் டி.எஸ்.பி., சோமசுந்தரம் விசாரணை நடத்தினார். வழக்கு தொடர்பாக பாப்பிசெட்டியை சேர்ந்த சின்னசாமி, 47, சுபாஸ், 26, கிருஷ்ணமூர்ததி, 28, அரவிந்த், 26, ஆகிய நான்கு பேரை நேற்று, தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் வெங்கடாசலபதியை, ஹிந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளர் கோபிநாத் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின் அவர்கள் கூறியதாவது: பெங்களூருவிலிருந்து வந்த, மதமாற்ற கும்பலை விட்டு விட்டு, உள்ளூரை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வெளி மாநில நபர்களையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட சின்னசாமியின் மனைவி வனிதா, நேற்று மாலை தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள மனுவில், 'எங்கள் விருப்பப்படியே, அந்த நிகழ்ச்சி நடந்தது. எனவே, கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE