தோர்டோ : ''புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகளிடம் பொய்யான தகவல்களை கூறி, அவர்களை குழப்பும் சூழ்ச்சியில், எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராதில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில், மூன்று புதிய வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்;
அப்போது, அவர் பேசியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக, எதிர்கட்சிகள் அரசியல் செய்வற்காக, விவசாயிகளை பலிகடா ஆக்குகின்றனர். தவறான தகவல்களை பரப்பி அரசியல் செய்ய நினைப்பவர்களை, விபரமான விவசாயிகள் அடையாளம் கண்டு கொள்வர். விவசாயிகளின் தோள்கள் வாயிலாக, தங்கள் துப்பாக்கிகளை பிரயோகிக்க, எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர்; அதை விவசாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பால் பண்ணைகளுக்கு, பால் விநியோகம் செய்யும் விவசாயிகளின் மாடுகளை, பண்ணைகாரர்கள் கையகப்படுத்துகின்றனரா...காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய போடப்படும் ஒப்பந்தத்தால், விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றனவா...
அவர்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை, தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை பயிரிடும், எளிய விவசாயிகள் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே, புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்ய சுதந்திரம் வேண்டும் என, நீண்ட காலமாகவே விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சீர்திருத்தங்களை இப்போது எதிர்க்கும் எதிர்கட்சிகள், ஆட்சியில் இருந்தபோது, ஆதரித்து பேசியுள்ளன.
அவர்கள் அதிகாரித்தில் இருந்தபோது எடுக்க தவறிய முடிவைத்தான், நாங்கள் இப்போது எடுத்துள்ளோம். புதிய சட்டங்கள் குறித்து, தவறான தகவல்களை பரப்பி, விவசாயிகளை குழப்பவும், அச்சுறுத்தவும், எதிர்கட்சிகள் சூழ்ச்சி செய்து வருகின்றன.விவசாயிகளின் சந்தேகங்கள் அனைத்தையும், 24 மணி நேரத்தில் தீர்த்து வைக்க, மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE