நரசிங்கபுரம் : நரசிங்கபுரம் பகுதியில், கூவம் ஆற்றின் குறுக்கே நடந்து வரும் பால பணிகளில், மின் கம்பம் இடையூறாக உள்ளதால் மீண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பேரம்பாக்கம் அடுத்துள்ளது நரசிங்கபுரம் ஊராட்சி. இப்பகுதியில், கூவம் ஆற்றுப் பகுதியில் பாலம் இல்லாததால், பொதுமக்கள் ஆற்றைக் கடந்து செல்ல, அவதிப்பட்டு வந்தனர்.இதையடுத்து, 2018ம் ஆண்டு, திருவள்ளூர் எம்.பி., வேணுகோபால், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 3.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாலம் கட்டும் பணி துவங்கியது.
அதன் பின், கடந்த ஓராண்டாக எவ்வித பணிகளும் நடைபெறாததால், தற்போது, திருவள்ளூர் கலெக்டர் பொன்னைய்யா ஆய்வு மேற்கொண்டு உத்தரவிட்டதன்படி, பால பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில், தற்போது, பாலப் பகுதியில், சாலையின் நடுவே இடையூறாக தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் மின் கம்பம் உள்ளதால், பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், மின் கம்பத்தை மாற்றியமைத்து, பால பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE