திருத்தணி : 'அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கட்டாயம் முக கவசத்துடன் வர வேண்டும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்' என, தலைமை மருத்துவர் அறிவுறுத்தினார்.
திருத்தணி அரசு மருத்துவமனை சார்பில், கொரோனா தொற்று குறித்தும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவருடன் வருபவர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என, மருத்துவர்கள் எச்சரித்து வந்தனர்.இருப்பினும், கொரோனா தொற்று குறையாத நிலையிலும், மக்கள் மற்றும் நோயாளிகள் சில நாட்களாக முக கவசம் அணியாமல், கூட்டமாக வருவதும், சிகிச்சைக்கு கும்பலாக நிற்பதும் தொடர்ந்து வருகிறது.
திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சீ. ராதிகாதேவி கூறியதாவது:காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.புறநோயாளிகள், உள்நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும்.சிலர், மருத்துவமனையில் தேவையின்றி சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். பார்வையாளர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் வந்து மட்டுமே, உள்நோயாளிகளை பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE