மாமல்லபுரம் : மாமல்லபுரத்திற்கு சுற்றுலா செல்வோரிடம், மொபைல் இணையவழியில் மட்டுமே நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிப்பதால், பயணியர் சிரமப்படுகின்றனர்.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால கலைச்சின்னங்களை காண, சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்.இதற்கு நுழைவுக் கட்டணமாக, இந்தியரிடம், தலா, 40 ரூபாய், வெளிநாட்டவரிடம், தலா, 600 ரூபாயை, சிற்பங்களை நிர்வகிக்கும் தொல்லியல் துறை வசூலிக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கால், சிற்ப வளாகங்கள், ஒன்பது மாதங்களாக மூடப்பட்டு, நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.ஊரடங்கிற்கு முன், பெரும்பாலானோர், நுழைவுச்சீட்டு மையத்தில், பணம் செலுத்தியே, சீட்டு பெற்றனர்.மொபைல் வழியாக, இணையவழி பண பரிமாற்றத்தில், கட்டண சலுகை இருப்பினும், இதை பயன்படுத்துவோர் மிக குறைவு.
இச்சூழலில், தற்போது பணமாக பெறாமல், இணையவழி பண பரிமாற்றம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இதனால், மொபைலில், இணையவழி பண பரிமாற்ற வழிமுறை அறியாதோர், இணைய சீட்டு பெற இயலாமல், ஏமாற்றம் அடைகின்றனர்.
வழிமுறை அறிந்தோரும், க்யூ.ஆர்., குறியீடை, எளிதாக ஸ்கேன் செய்ய இயலாமல், பலமுறை முயன்று, கட்டணம் செலுத்த இயலாமல் தவிக்கின்றனர். பயணியர் குவியும்போது, இத்தகைய சிக்கலால், நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே, பணமாகவும் பெற்று, நுழைவுச்சீட்டு வழங்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE