காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை, கண்ட இடத்தில் கொட்டினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத குடியிருப்பு கழிவு நீர், தனியார் லாரிகள் மூலம் எடுக்கப்படுகிறது.அவ்வாறு எடுக்கப்படும் கழிவு நீர், நகராட்சி ஒதுக்கியுள்ள இடத்தில் கொட்டாமல், திறந்தவெளி மற்றும் மழை நீர் கால்வாய்களில் கொட்டுவதாக, பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதையடுத்து, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில், கழிவு நீர் எடுக்கும் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடந்தது.
இதில், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பங்கேற்று பேசியதாவது:வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் கழிவு நீரை பாதுகாப்புடன் எடுக்க வேண்டும். தொட்டியின் உள்ளே இறங்கி பார்க்கக் கூடாது.மேலும், இத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், முக கவசம், ஆக்சிஜன் சிலிண்டர், கையுறை போன்றவற்றை, கட்டாயம் பயன்படுத்த வேண்டும். வீடுகளில் எடுக்கப்படும், கழிவு நீரின் தன்மையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நத்தப்பேட்டை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய தொட்டிகளில் கொட்ட வேண்டும். பிற இடங்களில் கொட்டக் கூடாது. இந்த தொழிலில் ஈடுபடும் லாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பதிவு செய்திருக்க வேண்டும்; நகராட்சியில் அனுமதி பெற்று செயல்பட வேண்டும்.நகராட்சி அறிவித்துள்ள விதிமுறை மீறி செயல்படும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE