திருப்பூர்:திருப்பூரில், போலி வாகன ஏஜென்சி நடத்தி, 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் ராயபுரம் பிரிவு, எஸ்.பி.ஐ., காலனி, 2வது வீதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவரிடம், திருப்பூர் காந்திநகர், இ.பி., காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், என்பவர், தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்ப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.கடந்த ஜன., மாதம் வங்கிப்பணியில் இருந்து நின்று விட்டதாகவும், கார் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.தொழிலை அபிவிருத்தி செய்ய பணம் தேவைபடுவதாக கூறிய அவர், ஒரு கார் விற்பனையாகும் பட்சத்தில், 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி, பணம் கேட்டுள்ளார்.இதை நம்பிய சூரியபிரகாஷ் ஒப்பந்தம் செய்து, 'ஆன்லைன்' மூலம், 22.94 லட்சம் ரூபாயை கோகுல கிருஷ்ணனுக்கு அனுப்பினார். ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய பணத்தை தராமல், கோகுலகிருஷ்ணன் காலம் கடத்தி வந்துள்ளார். பணம் குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்து, தலைமறைவாகியுள்ளார்.புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், உளுந்துார்பேட்டையில் கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். விசாரணையில், இதுபோன்ற பல இடங்களில், அவர் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை, கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE