ஆனைமலை;ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அருகே, கேரளாவுக்கு கடத்த முயன்ற, ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆனைமலை எஸ்.ஐ.,க்கள் கருப்பசாமி பாண்டியன், சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று, சேத்துமடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேத்துமடை புங்கன் ஓடை அருகே, வாகனத்தில் கேரளாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கப்படுவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், 'கேஎல் 06 டி 1582' என்ற கேரள பதிவெண் கொண்ட டெம்போவில் சோதனை செய்தனர். அதில், 60 மூட்டைகளில், ஐந்து டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அரிசி கடத்திய தாத்துாரை சேர்ந்த ஜெகநாதன், 34, என்பவரை கைது செய்து, பொள்ளாச்சி உணவுப்பொருட்கள் கடத்தல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதேபோல், கடந்த மாதம், 10ம் தேதி, வேட்டைக்காரன்புதுார் அருகே கோவை வருவாய்த்துறை பறக்கும் படையினர், நான்கு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.ஆனைமலை சுற்றுப்பகுதியில் தொடர்ந்து, பல டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்படுவது, ரேஷன் அரிசி கடத்தலுக்கு ஆனைமலை தலைமையிடமாக செயல்படுவதை உணர்த்துகிறது. மாவட்ட நிர்வாகம் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போலீஸ் எஸ்.ஐ., கருப்பசாமி பாண்டியன் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவின் உரிமையாளர் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பால்பாண்டி. இவர், பல இடங்களில் ரேஷன் அரிசி விலைக்கு வாங்கி, கேரளாவுக்கு கடத்தி வருகிறார். ஜெகநாதன், பால்பாண்டி ஆகியோர் மீது, உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE