பள்ளிபாளையம்: சமயசங்கிலி பகுதியில், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், கரும்புகள் தயாராக உள்ளன. ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பும் வழங்கப்படுகிறது. இதனால், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிபாளையம் அடுத்த கரமேடு, சமயசங்கிலி, செங்குட்டபாளையம், தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் பகுதிகளில் விவசாயிகள், பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து, கரமேடு பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு இப்பகுதியில், 100 ஏக்கருக்கு மேல், கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் தயாராக உள்ளது. இந்தாண்டு, பருவமழை சரியான காலத்தில் பெய்ததால், கரும்பு நல்ல வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் இறுதியில், விளை நிலங்களை நேரடியாக பார்வையிட்டு, அதிகாரிகள் கொள்முதல் செய்வர். கரும்பு அறுவடைக்கு தயராக உள்ளதால், அதிகாரிகள் எப்போது வருவார்கள் என, எதிர்பார்ப்பில் உள்ளோம். சமயசங்கிலி கரும்புக்கு தனி சுவை உள்ளதால், பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE