கரூர்: கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுமக்கள் முக கவசம் அணிவதை மறந்துள்ளனர். இதனால், முக கவசங்கள் தேங்கியுள்ளதால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த, கடந்த மார்ச், 25ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால், சர்ஜிகல் முக கவசம் விலை, ஐந்து ரூபாயில் இருந்து, 20 ரூபாய் வரையிலும், என்-95 முக கவசம், 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், பொது மக்கள் முக கவசம் அணிவதை தவிர்த்துள்ளதால், தேக்கம் அடைந்துள்ளன. இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசி வரும் வரையில், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ளன. ஆனால், மக்களிடம் முக கவசம் அணிய வேண்டும் என்ற ஆர்வம் குறைந்து விட்டது. உற்பத்தி செய்யப்படும் முக கவசங்களில், மூன்றில் ஒரு பங்கு மட்டும் விற்பனையாகிறது. இதனால் நிறுவனங்கள், 50 சதவீத உற்பத்தியை நிறுத்தி விட்டன. கொரோனா காலத்தில், மாதத்திற்கு என்-95 முக கவசம் உற்பத்தி, 75 லட்சமாக இருந்தது. தற்போது, 20 கோடியாகவும், 20 கோடியாக இருந்த சர்ஜிகல் முக கவசம், 60 கோடியாகவும் உயர்ந்து விட்டது. உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பயன்பாடு குறைந்துள்ளது. தேவைக்கு அதிகமாக, முக கவசங்கள் இருப்பில் உள்ளன. இந்நிலையில், என்-95 முக கவசங்களை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ஆனால், நிபந்தனை இல்லாமல் ஏற்றுமதிக்கு, அனுமதி வழங்க வேண்டும். மலிவு விலையில் விற்கப்படும், உள்ளூர் முக கவசங்களை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE