புதுடில்லி: விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை தீர்க்க தேசிய அளவில்குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. இந்த குழுவில், விவசாயிகள், மத்திய அரசு பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி - ஹரியானா சாலையில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி பாப்டே, போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டில்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என நீதபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. பிரச்னை அடிப்படையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. விவசாயிகளுடன் பல்வேறு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் எதையும் ஏற்கவில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, நீதிபதிகள் கூறுகையில், வேளாண் சட்டம் தொடர்பாக விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது. இதனால், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க தேசிய அளவில் குழு ஒன்றை அமைக்கலாம் எனவும், இதில், விவசாயிகள், அரசின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என தெரிவித்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE