உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஏரி, முழு கொள்ளளவு உயரமான, 20 அடியும் நிரம்பும் வகையில், தாழ்வாக உள்ள இரு கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுவதைத் தடுக்க, பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளால் தடுப்பு அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது மிகப் பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி, மூன்று கலங்கல், 18 மதகுகளுடன், 5,636 ஏக்கர் பாசன பரப்பளவும், 958.81 மில்லியன் கன அடி கொள்ளளவும் உடையது.இந்த ஏரி நீரை நம்பி, 18 கிராமங்களைச் சேர்ந்த, 5,462 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.நடப்பாண்டு பெய்த பருவ மழை மற்றும் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்போது, 18 அடி நிரம்பியுள்ளது.
இந்நிலையில், செய்யாற்றில் இருந்து ஏரிக்கு வரும் உபரி நீர், குறைவாக வருவதால், ஏரி நிரம்பும் வகையிலான நடவடிக்கையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.இது குறித்து, உத்திரமேரூர் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏரி முழுமையாக நிரம்பும் வகையில், தாழ்வாக உள்ள முதல் மற்றும் இரண்டாம் எண் கலங்கலில், மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், ஏரி நிரம்பி, மூன்றாம் எண் கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறும்.
இந்நீர், அரசாணிமங்கலம், கம்மாளம்பூண்டி, மேனலுார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில், ஏரிகளை நிரப்பும்.அதே நேரத்தில், அதிக மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால், மணல் மூட்டைகளால் அடைக்கப்பட்டுள்ள இரு கலங்கல்களும் திறக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE