கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு மற்றும் வடபுதுார், சொலவம்பாளையம் பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில், சுகாதாரமான முறையில் இறைச்சி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு மற்றும் அருகில் உள்ள வடபுதுார், சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பாளையம் பகுதிகளில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை, அதிகளவில் இறைச்சி விற்பனையாகிறது. ஆனால், இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில், ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளை அங்கேயே வெட்டி விற்பனை செய்கின்றனர்.இறைச்சி கடைகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சகித்துக் கொண்டு மக்கள் இறைச்சி வாங்கி செல்கின்றனர்.
சில கடைகளில் மட்டும் கண்ணாடி கூண்டு வைத்து சுகாதாரமாக இறைச்சி விற்பனை செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான இறைச்சி கடைகளில் கண்ணாடி கூண்டு அமைக்காமல், சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. மேலும், முதல் நாளில் விற்பனையாகாத இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து, மறுநாள் விற்பனை செய்யப்படுகிறது.இதனை தடுக்க, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களுடன், சுகாதார துறையினர் இணைந்து சோதனை நடத்தி, சுகாதாரமான முறையில் இறைச்சி கடை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE