சென்னை: வடசென்னை பகுதிகளில், ஐந்து மாதங்களாக, பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடி வந்த பிரபல கொள்ளையன், கள்ளக்காதலி வீட்டில் பதுங்கி இருந்தபோது, கைது செய்யப்பட்டார்.சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில், அடிக்கடி பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருடு போனது. ஐந்து மாதங்களாக இதுபோன்ற குற்றங்கள் நடந்து வந்ததால், போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அனைத்து இடங்களிலும், பிரபல கொள்ளையன், எழும்பூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்த செல்லப்பன், 49 என்பவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.இதையடுத்து, வியாசர்பாடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவின் டேனி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, செல்லப்பனை தேடும் பணி நடந்து வந்தது. அவர், மாதம் இருமுறை, வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியில் வசிக்கும் கள்ளக்காதலி ஆனந்தி வீட்டிற்கு வந்து செல்வது, தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்தி வீட்டை போலீசார் கண்காணித்து வந்தனர்.செல்லப்பன் நேற்று முன்தினம் இரவு, ஆனந்தி வீட்டிற்குள் சென்றபோது, தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், செல்லப்பன், வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் நகை, பணம் திருடி, உல்லாசமாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. இவர் மீது, ஓட்டேரி, வேப்பேரி, எழும்பூர், தலைமைச் செயலக காலனி உள்ளிட்ட காவல் நிலையங்களில், 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.செல்லப்பனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 10 சவரன் நகையை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE