காஞ்சிபுரம்: போலி கணக்கு எழுதி மோசடி செய்த குற்ற வழக்கில், முன்னாள் கதர் கிராம தொழில் வாரியத் துறை கண்காணிப்பாளருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம், 33 ஆண்டுகள், கடுங்காவல் தண்டனை விதித்தது.வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு, 65; காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.பதவியில் இருந்தபோது, போலியான கணக்கு எழுதி, மோசடி செய்ததாக, இவர் மீது, 2006ல், கதர் கிராம தொழில் வாரிய துறையின் துணைப் பதிவாளர் புகார் அளித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், வழக்கு பதிந்து, சின்னக்கண்ணுவை கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சின்னக்கண்ணுவை விடுதலை செய்தது.தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டு, 14 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு, நேற்று, விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி கயல்விழி, சின்னக்கண்ணுவுக்கு, 33 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 48 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் இளவரசு ஆஜரானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE