சென்னிமலை: வடமாநில தொழிலாளி கொலை வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூர், சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ், 40; இவர், போர்வெல் லாரி உரிமையாளர். இவரிடம் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ஹர் மாவட்டம், சோரங்காவை சேர்ந்த சுமன், 18, சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்த சேசுராஜ், 36; ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து விட்டு, ரமேஷுக்கு சொந்தமான மோளக்காடு தோட்டத்தில் தங்கி இருந்தனர். அப்போது சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் சேசுராஜ் ஆகியோர் மது அருந்திவிட்டு, சுமனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். பின்னர், மூவரும் சேர்ந்து அருகில் இருந்த பைப்பை எடுத்து, சுமனின் தலையில் அடித்துள்ளனர். இதில், சுமன் மயங்கி விழுந்தார். போர்வெல் லாரி மேலாளர் பரணி, சுமனை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுமன் இறந்து விட்டதாக கூறினர். உரிமையாளர் ரமேஷ் கொடுத்த புகார்படி, சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, சுசில் ராஜக், முன்னாராம், சேசுராஜ் ஆகியோரை கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE