சேலம்: அரசு, அதன் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டாக, ஊக்க ஊதியம், பதவி உயர்வு வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் - 89, உதவி பெறும் கல்லூரிகள் - 160 செயல்படுகின்றன. இதில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல்கலை மானிய குழு வழிகாட்டுதல்படி, 2017ல், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமலாகின. அப்போது, பி.ஹெச்டி., எம்.பில்., படிப்புகளுக்கு, ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்து தெளிவுரை வெளியிடவில்லை. இதனால், 2016 முதல், பி.ஹெச்டி., எம்.பில்., படித்தவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு நிறுத்தப்பட்டன. 2018ல், இதுகுறித்து பல்கலை மானிய குழு தெளிவுரை வழங்கிய பின்பும், இதுவரை, தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை, அதற்கான ஆணையை வழங்கவில்லை. இதனால், மூன்று ஆண்டாக, ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்காமல், கல்லூரி ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க, இணை செயலர் வடிவேல் கூறியதாவது: அரசு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது குறித்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு, அதன் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கப்படவில்லை. இதனால், ஊக்க ஊதிய உயர்வு, 5 ஆண்டு, 10 ஆண்டு, 13 ஆண்டுகளில் பெற வேண்டிய பதவி உயர்வு என, எதுவும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால், தமிழக அரசு, ஆணையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE