ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, மருதாண்டப்பள்ளி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், சின்னாறு அணை நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, 2,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில், சின்னாறு அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2017 அக்.,ல் நிரம்பிய சின்னாறு அணை, போதிய மழையின்றி தற்போது வறண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீர், மருதாண்டப்பள்ளி ஏரி வழியாக, சூளகிரி துரை ஏரி வரை வருவதால், அங்கிருந்து சின்னாறு அணை வரை, நீரை திருப்பி விட, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராகினர். இதையடுத்து, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து, மருதாண்டப்பள்ளி ஏரிக்கு, நேற்று மதியம் முதல், உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே, மருதாண்டப்பள்ளி ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், துரை ஏரிக்கு உபரி நீர் செல்கிறது. தடையின்றி உபரி நீர் செல்ல, மருதாண்டப்பள்ளி - துரை ஏரி இடையே வாய்க்காலில் உள்ள புதர்களை, விவசாயிகள் நேற்று சுத்தம் செய்தனர். துரை ஏரி நிரம்பும் பட்சத்தில், சின்னாறு அணைக்கு, தண்ணீர் செல்லும் வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆனால் வரும், பிப்., இரண்டாவது வாரத்தில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதனால், அதற்கு முன்பாக, சின்னாறு அணையை நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE