ஈரோடு: ஈரோட்டில், வருமான வரித்துறையினர் சோதனை, நேற்று மூன்றாம் நாளாக தொடர்ந்தது. இதில், நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு தங்கபெருமாள் வீதியில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் உள்ளது. இதன் இயக்குனர்களாக சீனிவாசன், சேகர், பூபதி உள்ளனர். பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், மசாலா பொருட்கள் தயாரிப்பு என, பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது நிறுவனங்களில், வரி ஏய்ப்பு செய்ததாக கடந்த, 14 முதல் ஈரோடு மாவட்டத்தில், 15க்கும் மேற்பட்ட இடங்களில், 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். முதல் இரண்டு நாட்களில், 18 கோடி ரூபாய் வரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று, மூன்றாம் நாளாக ரெய்டு தொடர்ந்தது. தங்கபெருமாள் கோவில் வீதியில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ்க்கு சொந்தமான, மற்றொரு அலுவலகத்தை நேற்று முன்தினம் அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு, முள்ளாம்பரப்பில் உள்ள அலுவலகங்களில் இருந்து, நேற்று முக்கிய ஆவணங்களை, வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். நேற்று, நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம், 22 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் பல கோடி மதிப்பிலான சொத்துகள், நிலம் வாங்கியது குறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, அதிகாரிகள் தணிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE