புதுடில்லி:பாலிவுட் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது பற்றி, உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது.
பாலிவுட் நடிகர் குணால் கம்ரா, 32. 'ரிபப்ளிக் டிவி' சேனலின் செய்தி ஆசிரியர்அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்கில், அவருக்கு, 'ஜாமின்' அளித்து, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதை, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'உச்ச நீதிமன்றம் காவிமயமாகி விட்டது' என விமர்சித்த கம்ரா, உச்ச நீதிமன்றத்தின் மீது காவி கொடி பறப்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள், நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தன.
மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கட்னேஸ்வர்கர் கூறுகையில், ''உச்ச நீதிமன்றம் பற்றி கம்ராவின் விமர்சனம், நீதித்துறையையே அவமதிக்கும் வகையில் உள்ளது. அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது பற்றி, இன்று முடிவு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தை விமர்சித்து, கார்ட்டூன் வெளியிட்ட, ஓவியர் ரச்சிதா தனிஜா மீதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது பற்றி, உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE