சென்னை:சுங்கச் சாவடிகளில், 'பாஸ்டேக்' கட்டண நடைமுறை, ஜனவரி முதல் கட்டாயமாகிறது; அதனால், இது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்த காத்திருப்பதால், பயண நேரம், எரிபொருள் விரையமாகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மின்னணு முறை யில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.'பாஸ்டேக்' மின்னணு அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இதை வாங்கி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும்; சுங்கச் சாவடியை, அந்த வாகனம் கடக்கும் போது, அங்குள்ள கையடக்க கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அந்த வாகன உரிமையாளரின், வங்கி கணக்கில்இருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும். இதனால், வாகனங்களின் காத்திருப்பு முற்றிலும் முறையும்.
தற்போது, சுங்கச் சாவடிகளில், ஒரு வழியில் மட்டுமே, ரொக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற அனைத்து வழிகளிலும்,'பாஸ்டேக்'முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, 80 சதவீத வாகனங்கள், 'பாஸ்டேக்' இல்லாமல், ரொக்க கட்டணம் செலுத்தி பயணிக்கின்றன. இவ்வாறு, 'பாஸ்டேக்' இல்லாமல், சுங்கச்சாவடிகளில் அதற்கான வழிகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜன., 1 முதல், 'பாஸ்டேக்' முறையில் மட்டுமே, சுங்கக் கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள, 48 சுங்கச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது.சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள்வாயிலாக, இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE