புதுடில்லி:'இன்டர்நெட்' பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் தேடுதல் உள்ளிட்ட வசதிகளை பிராந்திய மொழிகள் மூலம் வழங்கும் முயற்சிகளை 'கூகுள்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் கூகுள் இணையதளம் தேடு இயந்திரங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்திய மொழிகளில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக கூகுள் இந்தியாவின் தலைவர் சஞ்சய் குப்தா கூறியுள்ளதாவது:
இந்தியாவில் 10 கோடி பேர் கூகுளை பயன்படுத்திய காலத்திலேயே ஒன்பது இந்திய மொழி களில் தகவல்களை பெறும் வசதிகளை அளித்தோம். தற்போது நகரங்களைவிட கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் கூகுள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் கிராமங்களைச் சேர்ந்த புதிதாக 10 கோடி பேர் கூகுளை பயன்படுத்துகின்றனர்.
கூகுளைப் பயன்படுத்தும் இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய தாய் மொழியில் தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதிகமானோர் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் வகையில் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளோம்.ஒருவர் தேடும் தகவல்கள் குறித்து ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் விபரங்கள் அளிக்கும் வசதியை அறிமுகம் செய்தோம்.
தற்போது தமிழ் தெலுங்கு பெங்காலி மராத்தி மொழிகளில் இந்த வசதி அடுத்த ஒரு மாதத்தில் அளிக்கப்படும். அதாவது ஆங்கிலத்தில் ஒருவர் தேடினாலும் அவருடைய பிராந்திய மொழியில் உள்ள தகவல்களையும் பார்க்க முடியும்.அதேபோல் 'கூகுள் மேப்' எனப்படும் வழிகாட்டி தளத்திலும் தான் தேடும் இடம் குறித்த தகவல்களை ஒன்பது பிராந்திய மொழியில் தெரிந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இது மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE