துாத்துக்குடி: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளது.
துாத்துக்குடியில் 2018 மே 22ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இதுகுறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷனின் 23ம் கட்ட விசாரணை துாத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் நடக்கிறது. டிச.,14 முதல் நடக்கும் விசாரணையில் 49 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று வரை 42 பேர் ஆஜராகிவிட்டனர்.

இதுபற்றி விசாரணை கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் கூறியதாவது: இதுவரை 586 சாட்சிகளிடம் விசாரணை நடந்துள்ளது.775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ஜனவரியில் நடக்கும் விசாரணையில் ஆஜராகும்படி நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும். இன்னும் 500 பேருக்கு மேல் விசாரிக்க வேண்டியுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதில் கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஏற்கனவே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் கடிதம் வந்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE