ஊத்துக்கோட்டை - சிட்ரபாக்கம் அணைக்கட்டில் வெள்ள நீர் செல்லும் பாதையில், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள், ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.ஆந்திர மாநிலம், நகரியில், மலைக்குன்றுகளுக்கு இடையே உருவாகி வரும், ஆரணி ஆறு, பிச்சாட்டூர், நாகலாபுரம், சுருட்டப்பள்ளி வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.பின், சிட்ரபாக்கம், கல்பட்டு, பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், லட்சுமிபுரம் அணைக்கட்டு வழியாக, புலிக்காட் எனும் பகுதியில் கடலில் கலக்கிறது.சமீபத்தில் 'நிவர், புரெவி' புயல்கள் காரணமாக பெய்த பலத்த மழையால், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில், ஊத்துக்கோட்டையில், தற்காலிக தரைப்பாலம் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.இதனால், கடந்த மாதம், 25ம் தேதி முதல், போக்குவரத்து பாதித்தது. மேம்பால பணி முழுதும் முடிவடையாத நிலையில், தற்காலிக இரும்பு படிக்கட்டு அமைத்து, பொதுமக்கள் அதில் நடந்து செல்கின்றனர்.ஊத்துக்கோட்டையில் இருந்து, வாகன ஓட்டிகள் செல்ல, பெரியபாளையம், வெங்கல், தாமரைப்பாக்கம், வெள்ளியூர் வழியாக, 40 கி.மீட்டர் சுற்றி, திருவள்ளூர் செல்ல வேண்டி உள்ளது.தற்போது, நீர்வரத்து குறைந்ததால், தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கும் பணி துவங்கியது.இதனிடையே, பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், சிட்ரபாக்கம் அணைக்கட்டில் தண்ணீர் செல்லும் நிலையில், ஆபத்தான முறையில் அதில் கடந்து செல்கின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE