மொடக்குறிச்சி: சிவகிரி அருகே, சுடுகாட்டை தனியார் பள்ளி நிர்வாகம், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, ஆதி தமிழர் பேரவையினர், குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆதி தமிழர் பேரவை தொழிலாளர் பிரிவு, மாநில செயலாளர் வீரகோபால், ஊர்மக்கள் கூறியதாவது: சிவகிரி அருகே சின்னியம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், செவ்வந்தி நகர், பாலமேடு புதூர் பகுதிகளில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான பொது சுடுகாடு உள்ளது. தாமரைபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி, சுடுகாட்டை ஒட்டியுள்ள நிலத்தை விலைக்கு வாங்கி, சமன் செய்கின்றனர். அதோடு நில்லாமல், சுடுகாட்டையும் ஆக்கிரமித்து, மண்ணை கொட்டி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனு அளித்தோம். சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர்கள், நிலத்தை அளந்து எல்லை காணும்வரை, எவ்வித பணியிலும் ஈடுபடக்கூடாது என்றனர். ஆனாலும், பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, கொடுமுடி தாலுகா அலுவலகம் முன், ஆதி தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், கொடுமுடி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுடுகாட்டை மீட்டு தரவேண்டும். இல்லையேல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE