சத்தியமங்கலம்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில், வன ஊழியர் உள்பட இருவர், யானை தாக்கி பலியானது, பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், மழை காலத்துக்கு பிந்தைய, வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. இதில், 10 வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் குழுவாக பிரிந்து ஈடுபட்டனர். விளாமுண்டி வனச்சரகம், கல்லாம்பாளையம் வனப்பகுதியில், மாயற்றின் தென்பகுதியில் வன காப்பாளர் பொன் கணேசன், 40, தலைமையில் வனக்காவலர் சதீஷ்குமார், 25, வேட்டை தடுப்பு காவலர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதர் மறைவில் இருந்த யானை, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை துரத்த தொடங்கியது. இதில் வனக்காவலர் சதீஷ்குமாரை, தும்பிக்கையால் பிடித்து காலால் மிதித்து கொன்றது. அவரை காப்பாற்ற முயன்ற வனக்காப்பாளர் பொன் கணேசனை தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார். வன ஊழியர்கள் தப்பியோடி, கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மறைந்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரன், 26, என்பவரை யானை மிதித்துக் கொன்றது. ரேஞ்சர் சரவணன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். காயமடைந்த பொன் கணேசனை மீட்டு, சத்தி அரசு மருத்துமனைக்கு அனுப்பினார். சதீஷ்குமார், பிரபாகரன் உடல்களை, சத்தி அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். பலியான சதீஷ்குமார், கோபி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்; திருமணமாகவில்லை. வன காவலர் மற்றும் தன்னார்வலர் பலியானது, வனவிலங்கு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE