புதுடில்லி:'கொரோனா சிகிச் சைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில், தீ பாதுகாப்பு நடவடிக்கையை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், கொரோனா சிகிச்சைக்கு என, ஒதுக்கப்பட்ட மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து நோயாளிகள் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். கொரோனா தொடர்பான மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ராஜ்கோட் மருத்துவமனை தீ விபத்தையும், விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி அசோக் பூஷண் தலைமையில், நீதிபதிகள் ஆர்.எஸ்.ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:கொரோனா சிகிச்சைக்கு என, ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள்அனைத்திலும், தீ பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது.
தீயணைப்புத்துறையிடமிருந்து, இந்த மருத்துவமனைகள், தீ பாதுகாப்பு சான்றிதழை, நான்கு வாரங்களில் பெற வேண்டும். இல்லாவிடில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா மருத்துவமனைகளில், தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது பற்றிய அறிக்கையை, மாநில அரசுகள், ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ள விதிமுறைகளை, மாநில அரசுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை, தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE