புதுடில்லி:நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசு, கடந்த ஆண்டு, தமிழக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து, ஜி.மோகன் ராவ் உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக நெடுஞ்சாலை சட்டம், தமிழக தொழில் நோக்கங்கள் சட்டம், தமிழக ஹரிஜன் நலச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை, தமிழக அரசு புதுப்பித்து, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைநிறைவேற்றியுள்ளது. கடந்த, 2013ல், பார்லி.,யில், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மீள் குடியேற்ற நடவடிக்கைகளில், வெளிப்படைத் தன்மையுடன், நியாயமான இழப்பீடு பெற உரிமை அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த நோக்கத்திற்கு ஒத்து வராத மூன்று சட்டங்களை புதுப்பித்து, தமிழக அரசு இயற்றியுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது.எனவே, ஒத்து வராத சட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், தமிழக அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு, இது குறித்து பதில் அளிக்குமாறு,தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE