அலகாபாத் : கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து, உத்தர பிரதேச அரசிடம், அலகாபாத் உயர் நீதிமன்றம், பதில் கோரியது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவதாக கூறப்படும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக, கடந்த மாதம், அவசர சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
பெண்களை வலுக்கட்டாயமாக மணம் முடித்து, மதம் மாற்றும் ஆண்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க, இந்த அவசர சட்டம் வழிவகுக்கிறது. இதைத் தவிர, அந்த கட்டாய திருமணம், சட்டப்படி செல்லாது என்றும் அறிவிக்கப்படும்.
![]()
|
இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு எதிராக, சவுரப் குமார் என்ற வழக்கறிஞர், பொது நல மனு ஒன்றை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசர சட்டம், மதம் மாறுவதற்கும், வாழ்க்கையை சுயமாக தேர்வு செய்துகொள்வதற்குமான அடிப்படை உரிமைகளை, பறிக்கும் வகையில் உள்ளது. இந்த சட்டம், அரசியலைப்புக்கு முரணானது. எனவே, இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை, இந்த சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி கோவிந்த் மாத்துர் மற்றும் நீதிபதி பியுஷ் அக்ரவால் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு குறித்து பதிலளிக்கக்கோரி, உத்தர பிரதேச அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி, வரும் ஜனவரி, 4ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE