சென்னை:காலமுறை ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, சுகாதாரத் துறை கூடுதல் செயலரிடம், அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியுள்ளதாவது:தமிழக அரசு டாக்டர்கள், காலமுறை ஊதிய உயர்வு கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது, காலமுறை ஊதிய உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் நியமனம், பட்ட மேற்படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு.மேற்படிப்பு டாக்டர்களுக்கு கவுன்சிலிங் முறையில் பணி ஒதுக்கீடு போன்ற, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எட்டு டாக்டர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, டாக்டர்களின் நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்க வேண்டும். குறிப்பாக,கொரோனா காலம் என்பதால், போராட்டத்தில் ஈடுபட்டால், பொது மக்கள் பாதிக்கப்படுவர். அதனால், நீதிமன்றத்தை அணுகி உள்ளோம்.தற்போது, 2,000 'மினி கிளினிக்' திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதபோன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும், டாக்டர்கள் துணையாக இருக்கிறோம். எனவே, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE