திருப்பூர்;மண்ணரை குளத்துக்கான வரத்து கால்வாயில், அரசியல் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் அருகில், 25.70 ஏக்கர் பரப்பளவில் மண்ணரை குளம் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து அணைக்காடு பகுதியிலுள்ள தடுப்பணைக்கு வரும் நீர், 2.5 கி.மீ., நீள வாய்க்கால் மூலம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.பல ஆண்டுகளுக்கு முன், இந்த வாய்க்கால், 25 அடி அகலத்தில் இருந்த நிலையில், ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. தற்போது, நொய்யல் ஆற்றில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மண்ணரை குளத்தை புனரமைக்க பொதுப்பணித்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.குளத்துக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயில் உரிய அளவீடு செய்து, ஆக்கிரமிப்புஅகற்ற, சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.ஆனால், அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால், வரத்து கால்வாயில் கான்கிரீட் தடுப்பு அமைக்கப்படும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறிதாவது:மண்ணரை குளத்துக்கு செல்லும், வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. தொடர்ந்து, திட்ட பணிகளை மேற்கொண்டால் அரசு ஒதுக்கீடு செய்த தொகை முழுவதும் வீணாகி விடும். எனவே, குளத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பெயர் கூற விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வரத்து வாய்க்கால், 75 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்றி கொள்ளுமாறு நோட்டீஸ் கொடுத்தும் அகற்றவில்லை. இதனால், மண்ணரை குளத்துக்கு மழைநீர் செல்வது கேள்விக்குறியாகி விட்டது. இது குறித்து, உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE