மேட்டுப்பாளையம்:''மேட்டுப்பாளையம் தாலுகாவில், கடந்த ஓராண்டில், 55 பேரை தீயணைப்பு துறையினர், ஆபத்திலிருந்து காப்பாற்றி உள்ளனர்,'' என, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்துக்கு, கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ், ஆய்வு செய்ய வந்தார். அங்கு அனைத்து தீயணைப்பு கருவிகளை, எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள், செய்முறையில் செய்து காண்பித்தனர். தீ விபத்துக்களில் தத்தளிப்பவர்களை, எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.இதுகுறித்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஷ் கூறியதாவது:மேட்டுப்பாளையத்தில் கடந்த ஓராண்டில், தீ விபத்து குறித்து, 90 அழைப்புகளும், தண்ணீர் மற்றும் விபத்துக்களில், மீட்பு பணிக்கு, 81 அழைப்புகளும் வந்தன. இதில், 55 நபர்களை உயிருடன் காப்பாற்றி உள்ளனர். 38 விலங்குகளை உயிருடன் மீட்டனர். விபத்துகளில், 48 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாத்தனர். ஒரு லட்சத்து, 2,400 ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் அழைப்பு வந்தவுடன், சிறப்பாகப் பணிபுரிகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE