வாஷிங்டன் : அமெரிக்காவில் எச் - 1 பி விசா பெறுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி அங்கீகார ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிக்கக்கோரி அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனுக்கு நேற்று முன்தினம் 60 எம்.பி.க்கள் கடிதம் எழுதினர்.

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு எச் - 1 பி விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. அவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு எச் - 4 விசாக்களுடன் வேலைகளும் வழங்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்கர்கள் பலரும் வேலை இழந்தனர்.
இதையடுத்து அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு எச் - 1பி விசாக்களையும் எச் - 4 விசாக்களையும் இந்த ஆண்டு இறுதிவரை வினியோகிக்க தடை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அமெரிக்காவில் அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு 60 எம்.பி.க்கள் சேர்ந்து கோரிக்கை கடிதம் ஒன்றை நேற்று எழுதினர். அதில் எச் - 4 விசாவுடன் பணியாற்றுவோரின் பணி அங்கீகார ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மேலும் நீட்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். இந்த கடிதத்தில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களான அமி பெரா ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போனி வாட்சன், கோல்மேன், ரஷிதா தலிப் பார்பரா, லீ ஜூடி சூ உள்ளிட்ட மற்ற எம்.பி.க்களும் கையெழுத்திட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டில் 1.26 லட்சம் பேர் எச் - 4 விசாக்கள் பெற்றனர். இதில் 95 சதவீதம் பேருக்கு பணிகளும் வழங்கப்பட்டன. 2018ல் வெளிடப்பட்ட ஆய்வறிக்கையில் எச் - 4 விசாக்கள்
வைத்திருப்போரில் 93 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது தெரியவந்தது. ஐந்து
சதவீதம் பேர் சீன வம்சாவளியினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE