ஹத்ராஸ்: ஹத்ராஸ் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும், தலித் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உ.பி., மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில், கடந்த செப்டம்பர், 14ம் தேதி, 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அதிர்வலைகள்
பின், டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி, செப்டம்பர், 29ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து, இரவோடு இரவாக, அவரது உடல்,ஹத்ராசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவசர அவசரமாக தகனம் செய்யப்பட்டது.
இறந்த பெண்ணின் உடலை, குடும்பத்தின ரிடம் ஒப்படைக்காமல், போலீசாரே தகனம் செய்ததாக, புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .கடும் எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, இந்த வழக்கு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, இதில் தொடர்புடைய, சந்தீப், லவ்குஷ், ரவி மற்றும் ராமு என்ற நான்கு பேரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்கள், பதிவு செய்துக்கொள்ளப்பட்டன.அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடமும், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குற்றப் பத்திரிகை
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிராக, சி.பி.ஐ., அதிகாரிகள், சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என, உ.பி., போலீசார் முன்பு கூறி இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE