தர்மபுரி: தர்மபுரி வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி, வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில், திருந்திய பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பயிர் கடன் மற்றும் கடன் பெறாத விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். விதைப்பு முதல், அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் இழப்பு ஏற்படுதல், அறுவடைக்குப்பின் ஏற்படும் மகசூல் பாதிப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, கொள்ளு, நிலக்கடலை, கரும்பு, ராகி உள்ளிட்ட பயிர்களுக்கு, தனித்தனியாக பிரிமீயத்தொகை செலுத்தி, பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள், அவரவர்கள் பகுதியில் உள்ள வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையம் மூலம், பிரீமியத்தொகை செலுத்தி, பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன், மையங்களில் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE