சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியசையும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE