விருதுநகர் : விருதுநகர் நகராட்சி துாய்மை பணியாளர்களை தனியாருக்கு தாரை வார்த்த நகராட்சி நிவாகத்தால் சுகாதார பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து சுகாதார பிரிவில் பணியாற்றும் 80 நிரந்தர துாய்மை பணியாளர்கள், 100 ஒப்பந்த துாய்மை பணியாளர்களும் இனி தனியாருக்கு கீழ் பணிபுரிய உள்ளனர். இதற்கு முன்பும் ஒருமுறை தனியாரிடம் சுகாதார பணிகள் விடப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் நடந்தன. பணிகளும் முறையாக நடக்கவில்லை. தற்போது மீண்டும் தனியாரிடம் பணிகளை ஒப்படைத்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.நிதி நெருக்கடியில் தவிக்கும் நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தது கூடுதல் சுமை தான்.
துாய்மை பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை பணயம் வைத்து தான் குப்பை அள்ளுகின்றனர். தொடர்ந்து குப்பை அள்ளி புற்றுநோய், காசநோயால் பாதிக்கப்பட்ட பலரும் உண்டு. எந்த துறையினர் ஸ்டிரைக் செய்தாலும் துாய்மை பணியாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. ஊரின் சுகாதார நலனுக்காக உழைக்கும் அவர்களை கொரோனா நேரத்தில் கவுரவித்தோம். தற்போது இவர்களை தனியாரிடம் நகராட்சி தாரை வார்த்துள்ளதால் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய நெருக்கடியில் சிக்க வாய்ப்புள்ளது. சுகாதார பணிகளிலும் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் நிலை கருதி நகராட்சி நிர்வாகம் தங்களது முடிவை மாற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE