கரூர்: கரூர் அருகே தேர்தல் பிரசாரத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கினார். முதல்வர் பழனிசாமி, நேற்று, சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதி பெரிய சோரகையில், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். கரூர் மாவட்டம், பஞ்சமா தேவி குடித்தெருவில், வளர்ச்சி பணிகளை துவக்க சென்ற, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களிடம் பேசி தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அப்போது, அவர் பேசியதாவது: அ.தி. மு.க., அரசு, 10 ஆண்டுகளை கடந்து விட்டது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட, பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக வேலை திட்ட பணியில், விடுப்பட்ட தொழிலாளர்களுக்கு, விரைவில் சம்பளம் வழங்கப்படும். கடந்த எம்.பி., தேர்தலில், தி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை நம்பி, எங்களை ஏமாற்றி விட்டீர்கள். அதே பொய் பிரசாரங்களை, வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வினர் சொல்வர். அதை நம்ப வேண்டாம். இலவச மின்சாரம் உள்ளிட்ட, நடைமுறையில் உள்ள எந்த திட்டங்களையும், அ.தி.மு.க., அரசு நிறுத்தாது. கூடுதலான திட்டங்களை வழங்க, முதல்வர் பழனிசாமி ஆலோசித்து வருகிறார். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE