திருத்தணி : திருத்தணி முருகன் மலைக்கோவிலில், டிச.,31, ஜன.,1ம் தேதி ஆகிய நாட்கள் பக்தர்கள் தரிசனம் நேரம் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: முருகன் கோவிலில், டிச.,31ம் தேதி நடைபெறும் திருப்படித் திருவிழா, ஜன.,1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் ஆகிய இரு நாட்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.டிச.,31ம் தேதி நள்ளிரவு, 12:01 மணி தரிசனம், பஜனை, இன்னிசை நிகழ்ச்சி கச்சேரிகள் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்று, மாலை, 5:00 மணி முதல், ஜன.,1ம் தேதி, காலை, 8:00 மணி வரை உற்சவ மூர்த்தியை தரிசனம் செய்ய 'யு - டியூப்' மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.மேற்கண்ட இரு நாட்கள், ஒரு மணி நேரத்திற்கு சிறப்பு கட்டணத்தில், 200 பேரும், இலவச பொது தரிசனத்தில், 200 பேரும் என, ஒரு நாளைக்கு, 4,800 பக்தர்கள், தரிசனம் செய்யலாம். இதற்கு, www.tnhrce.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். குடில்கள் மற்றும் அறைகளில் தங்குவதற்கும் அனுமதி இல்லை. முன்பதிவும் இல்லை.மலைப்பாதையில், இரவு, 8:00 மணிக்கு மேல், வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
படிபஜனை துவக்கம் பக்தர்கள் அனுமதியின்றி சிறிய அளவில் கோவில் சார்பில் நடத்தப்படும். இதுதவிர, டிச.,31, ஜன.,1ம் தேதிகளில், மலைக்கோவில் வெளி பிரகாரத்தில் நடைபெறும் வெள்ளி மயில் மற்றும் வெள்ளி நாக வாகன உற்சவம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE