சென்னை : விபத்தில் உயிரிழந்த மேஸ்திரியின் மனைவிக்கு, 18.40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர், குணசேகர், 44; மேஸ்திரி. இவர், 2015 பிப்ரவரியில், பைக்கில் பின்புறம் அமர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, டிரைவர் அஜாக்கிரதையால், சாலையின் மையத்தடுப்பில் பைக் மோதியது. இதில், பலத்த காயமடைந்த குணசேகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்நிலையில், கணவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக் கோரி, குணசேகரின் மனைவி ஆண்டாள், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி வி.சுதா முன் நடந்தது. விசாரணையில், மனுதாரர் கணவரின் இறப்பிற்கு, பைக்கை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 18.40 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், 'தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE