கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள நெ.10 முத்துார் நொய்யல் பப்ளிக் பள்ளி ரோடு பிரிவில் இருந்து, கோழிப்பண்ணை வரை செல்லும் தார்ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கிணத்துக்கடவு முதல் நெ.10 முத்துார் வன்னி குமாரசாமி கோவில் வரை, இணைப்பு தார்ரோடு உள்ளது. இதில், கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட கிணத்துக்கடவு முதல் பகவதிபாளையம் கோழிப்பண்ணைக்கு முன் வரை தார்ரோடு புதிதாக போடப்பட்டது. இதேபோல், நெ.10 முத்துார் வன்னி குமாரசாமி கோவில் முதல், நொய்யல் பப்ளிக் பள்ளி ரோடு பிரிவு வரை தார்ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையேயுள்ள, நொய்யல் பப்ளிக் பள்ளி ரோடு பிரிவில் இருந்து, கோழிப்பண்ணை வரையுள்ள 500 மீட்டர் துாரம் உள்ள குண்டும், குழியுமான தார்ரோடு புதுபிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்களும் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. தற்போது மழை பெய்து வருவதால், குழிகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.இதில், வாகனங்கள் செல்லும் போது சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. சில சமயங்களில் வாகனங்களில் செல்வோர் காயமடைகின்றனர். இதனை தடுக்க, கிணத்துக்கடவு ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர், இந்த ரோட்டை புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE