கிருஷ்ணகிரி: ஆட்டு கொட்டகைக்கு, மர்ம நபர்கள் தீ வைத்ததில், 10 ஆடுகள் தீயில் உடல் கருகி பலியாகின. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, நேரலகோட்டையை சேர்ந்தவர் சின்னசாமி, 70; விவசாயி. இவர், தன் தோட்டத்தில் கொட்டகை அமைத்து, 11 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் அந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்துள்ளது. பர்கூர் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடம் சென்று தீயை அணைக்க சென்றனர். அதற்குள் ஆட்டு கொட்டகை முற்றிலும் எரிந்து, அதிலிருந்த, 11 ஆடுகளில், 10 ஆடுகள் உடல் கருகி பலியாகின. ஒரு ஆடு மட்டும் தீக்காயத்துடன் உயிர் தப்பியது. இது குறித்து, சின்னசாமி புகாரின் படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் இணைப்பு இல்லாத கொட்டகை எப்படி தீப்பிடித்து எரிந்தது, கொட்டகைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE