கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, தலைமை தனுஷ் நற்பனி மன்றம் சார்பில், அதன் நிர்வாகிகள் கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., செல்லகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தேவசமுத்திரம், திருவண்ணாமலை மேம்பாலம், சேலம் சாலை ஆவின் மேம்பாலம் ஆகிய இடங்களில், குப்பை அதிகமுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி நகராட்சியில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், கொசு உற்பத்தி பெருகி மலேரியா, டெங்கு போன்ற வைரஸ்கள் வர அதிக வாய்ப்புள்ளதால், அவற்றை தடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், புதிய சாலையை உடனே அமைக்க வேண்டும். அகசிப்பள்ளி, வேட்டியம்பட்டி, தாடிக்காரன் கொட்டாய், மங்கம்மாபுரம், மோட்டூர் ஆகிய இடங்களில், போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே, இங்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு, ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரியில், பொது இடங்களில் பெண்களுக்கான பொது கழிப்பிட வசதி இல்லை. எனவே, நகராட்சி எல்லைக்குள், பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE