சென்னை :'தமிழகத்தில், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும், 2021 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, அனுமதி இல்லை' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றை தடுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மார்ச், 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பால், நோய் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
![]()
|
இந்நிலையில், 2021 ஆங்கில புத்தாண்டு வருகிறது. புத்தாண்டையொட்டி, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களில், டிசம்பர், 31 இரவு, ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடக்கும். இதில், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதேபோல, அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடுவர். இதனால், கொரோனா தொற்று, மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சில வெளிநாடுகளில், கொரோனா நோய் தொற்று, தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதனால், நோய் தொற்று தடுப்புப் பணிகளை, மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்றவை வழக்கம் போல செயல்படலாம். ஆனால், வரும், 31ம் தேதி இரவு நடத்தப்படும், 2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.
அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, அனுமதி இல்லை என்பதால், டிச., 31, ஜன.,1 ஆகிய நாட்களில், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல, அனுமதி இல்லை.கொரோனா தொற்று ஏற்படாதிருக்க, முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை, பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி, அரசு எடுத்து வரும், கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE