உடுமலை : நிலையான நீர் வரத்து காரணமாக, அமராவதி அணையின் நீர்மட்டம் சரியாமல் உள்ளதால், வரும் பாசன காலத்துக்கு சிக்கல் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
உடுமலை அமராவதி அணையினால், திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட, 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, அணையிலிருந்து அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டுக்கு, பிரதான கால்வாயிலும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காலத்தில், அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும். நடப்பாண்டும், இப்பருவமழை கைகொடுத்ததால், கடந்த, 5ம் தேதி அணை மூன்றாவது முறையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, வழியோரத்திலுள்ள குளங்கள், தடுப்பணைகள் நிரம்பியது.
இந்நிலையில், நீர் வரத்து ஆறுகளில் இருந்து நிலையான வரத்து இருப்பதால், அணை நீர்மட்டம் குறையாமல், உள்ளது. நேற்றைய காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம், 90 அடிக்கு, 89.60 அடியாக இருந்தது.அணைக்கு, வினாடிக்கு, 895 கன அடி நீர் வரத்தும், அணையிலிருந்து வினாடிக்கு, 863 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நிலையான நீர் வரத்து கிடைத்து, முழு கொள்ளளவில், நீர் நிரம்பியுள்ளதால், வரும் பாசன காலத்தில், பற்றாக்குறை ஏற்படாது என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE