கள்ளக்குறிச்சி:மாசடைந்த குடிநீரைக் குடித்தவர் இறந்ததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த திம்மலை காலனியில், நேற்று முன்தினம் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்தது. அதை குடித்த, 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.அவர்களில், ஆறு பேர் தனியார் மருத்துவமனையிலும், மூன்று பேர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில், கண்ணன், 65, என்பவர், இறந்தார்.கண்ணன் இறப்புக்கு மாசடைந்த குடிநீர் தான் காரணம் என, அதிகாரிகளை கண்டித்து, 200க்கும் மேற்பட்டோர் திம்மலை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கலெக்டர் கிரண் குராலா பேச்சு நடத்தினார்.அப்போது, 'குடிநீர் எடுக்கும் இடம் பள்ளமாக இருப்பதால், அங்குள்ள போர்வெல் பகுதியை மேடாக்க வேண்டும். இறந்தவரின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். ஊராட்சி செயலர் மற்றும் கிராம செவிலியரை இடமாற்றம் செய்ய வேண்டும். பொது கழிவறை கட்டித் தரவேண்டும். தெருக்களில் கழிவுநீர் தேங்காதபடி வடிகால் அமைத்து தர வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.'கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE